முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாகவுள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
மேற்படி மாவில்ல பேணல் காடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர் றிஷாட் பதியூதீன் பதவி துறக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,
மாவில்ல பேணல் காடுகளாக மன்னார் மாவட்டத்தில் முசலி மற்றும் மடு பிரதேச செயலக பகுதிகளில் சுமார் 1 இலட்சம் ஏக்கர் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மாகாண சபையில் 2 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
அந்தக்குழு விசாரணைகளை நடத்தி 20.08.2017 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. ஆனால், இந்த விசாரணைக்குழு மக்களின் கருத்துக்களைப் பெறவில்லை.
அத்துடன், மாகாண சபை இந்த விடயத்தில் தலையிடவில்லை. இதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீனும் காரணம்.
குறிப்பாக, இந்த விடயத்தை தானே செய்ய வேண்டுமென்பதால், மற்றைய முஸ்லிம் தலைவர்களையும் வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரையும் தலையிட விடாமல் தடுக்கிறார்.
ஆனால், அங்கே காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே, அமைச்சர் றிஷாட் பதியூதீன் தன் பதவியைத் துறக்க வேண்டும் அல்லது அந்தக்காணிகள் பறிபோனமைக்கு அமைச்சர் பொறுப்பாளியாக வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்