
புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இருமாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ளம் அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ் பிரதிநிதிகள்) சார்பில் பொறுப்பேற்று, சுவிஸிலுள்ள பௌத்த விகாரையின் பீடாதிபதியின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.
மேற்படி பொருட்களை சுவிஸ் பேர்ண் மாநில, கும்லிங்கன் பகுதியிலுள்ள “சிலோவா” வைத்தியசாலையில் (SILOHA Spital, Gumlingen) தொழில் புரியும் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை), அங்குள்ள நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளையேற்று, அந்த “சிலோவா வைத்தியசாலை” நிர்வாகம் தந்த பொருட்களுடன், மேலும் சில தமிழ் உறவுகளும் தந்த பொருட்கள் யாவும், சுவிஸிலுள்ள சூரிச் பௌத்த விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்களின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்க்காக ஒப்படைத்து வைக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சுவிஸ் பிரதிநிதிகள், நண்பர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உதவிகள் கடந்த 17.08.2017ம் திகதி இரத்தினபுரி பகுதியில் வைத்து பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சூரிச் பௌத்த விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு வாழ்ந்தாலும், தமிழ் சிங்களம் என்ற வேறுபாடின்றி, புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவி புரிந்த அனைத்து தமிழ் மக்களுக்கும், இதனை ஏற்பாடு செய்த அமைப்பின் (“தாயகம்” -புங்குடுதீவு) பிரதிநிதிகளுக்கும், தமது நன்றியெனவும், இவர்களுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும், மேற்படி உதவிகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் மிக மனம் மகிழ்வதாகவும், அவர்களின் அன்பையும் பகிர்ந்து கொள்வதாகத்” தெரிவித்தார்.
இன, மத பேதம் பாராமல்; மனிதத்தையும், மனித நேயத்தையும் மதிக்கும் “மனிதர்கள்” நாம் என்பதைப் புரிய வைத்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றி.
கடந்த காலங்களிலும், “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, செட்டிக்குளம், மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புங்குடுதீவு உறவுகளின் (குழந்தை, குமார், தயா, பன்னீர், அன்பு) உதவியுடன் எம்மால் முடிந்த உதவிகளைப் புரிந்திருந்தோம்.
இப்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினைத் தொடர்ந்து “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையேற்று உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், சுவிஸிலுள்ள சூரிச் பௌத்த விகாரையின் பீடாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்துதவிய திரு.அஜீவன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இவ்வண்ணம்..
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு.
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்” -புங்குடுதீவு