(அகமட் எஸ். முகைடீன்)
இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (2) திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம் நசீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப்.நஹீஜா முஸாபிர, இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மௌலவி யு.கே. ஜபீர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹமீட், பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 62 குடும்பபங்களுக்கான பயனாளிகளுக்கு சுயதொழிலை மேற்கொள்ளும் வகையில், தையல் இயந்திரம், கேஸ் சிலின்டர் உள்ளிட்ட அடுப்பு போன்ற உபகரணங்கள் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு, கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவையினைத் திறன்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட அலுவலக கைப்பை கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு இந்நிகழ்வின் போது பிரதியமைச்சரினால் கையளிக்கப்பட்டது.